நாமக்கல் அருகே லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., பணியிடைநீக்கம்: எஸ்.பி., உத்தரவு
நாமக்கல் அருகே லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியை அடுத்த செலம்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார் (42). இவர் மீது, வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரணை அறிக்கையில் செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரின் பெயரை சேர்க்காமல் இருக்க, வேலகவுண்டம்பட்டி போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் செல்வகுமார் புகாளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் ரூ.10 ஆயிரத்தை எஸ்எஸ்ஐ சண்முகத்திடம் கொடுத்தார். அப்போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சண்முகத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார், நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர். இதையொட்டி எஸ்எஸ்ஐ சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.