குடிசைமாற்று வாரிய வீடுகளை கொரோனா வார்டாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கொண்டிசெட்டிப்பட்டி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிப்பட்டியில், சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. மொத்தம் 960 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், அதற்குரிய தொகையையும் கடந்த 2017ம் ஆண்டு செலுத்தினர். எனினும், நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சம்மந்தப்பட்ட பயனாளிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அந்த குடியிருப்புகளை கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியது. இதையறிந்த சம்மந்தப்பட்ட பயனாளிகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த வருவாய் துறை மற்றும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வீடு ஒதுக்கீடு செய்யும் வரை கலைந்து செல்ல முடியாது எனக்கூறி சம்மந்தப்பட்ட பயனாளிகள் குடிசைமாற்று வாரிய வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய அதிகாரிகள், இது குறித்து உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, விரைவில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.