நாமக்கல்லில் நாளை போலியோ முகாம்: 1.20 லட்சம் குழந்தைகளுக்கு இலக்கு
நாமக்கல்லில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
HIGHLIGHTS
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் நாளை 27ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. நாளை 27ம் தேதி நடைபெறும் முகாமில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1,052 முகாம்களும், நகராட்சி பகுதியில் 150 முகாம்களும் என மொத்தம் 1202 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் அரசு மற்றும் சேவை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 4,927 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேலும் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா தியேட்டர்கள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 52 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 22 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியம்மிக்கது, பாதுகாப்பானது.
எனவே மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உள்ள. அன்று பிறந்த குழந்தை முதல், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களுக்கு அழைத்துச்சென்று, சொட்டு மருந்து அளித்து போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். வெளியூர் செல்பவர்கள் அப்பகுதியில் உள்ள மையங்களில் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.