ஜேடர்பாளையம் பகுதியில் தொடர் தீ வைப்பு: இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
ஜேடர்பாளையம் பகுதியில் தொடர் தீ வைப்பு தொடர்பாக பரமத்தி காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்
HIGHLIGHTS
ஜேடர்பாளையம் பகுதியில் தொடர் தீ வைப்பு சம்பவத்தால், பரமத்தி காவல் ஆய்வாளர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் நித்யா (28) என்பவர் கடந்த மார்ச் 11ம் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இரண்டு பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதையடுத்து, வெல்ல ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடிசைக்கு தீ வைப்பு, வீடுகளுக்கு தீ வைப்பு, டிராக்டர்கள் எரிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு என, அடுத்தடுத்து தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்றதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த, 14ம் தேதி, அதிகாலை சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அதில், படுகாயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம், அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல்துறை ஏடிஜிபி சங்கர், கோவை மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்ட உயர் காவல்அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்பகுதியில் மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பரமத்தி காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர்காவல் ஆய்வாளர் ரவி, பரமத்தி காவல் நிலையத்திற்குபணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, சேலம் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (பொ) உத்தரவிட்டுள்ளார்.