அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
HIGHLIGHTS
அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கரமிப்பு செய்துள்ளனர். அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் அருகே உள்ள குரும்பபாளையம்மேடு குசிலாம்பாறை பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் விவசாயம் செய்துள்ளார். தொடர்ந்து, நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பலமுறை நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும், அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தொடர்ந்து விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவிப் பொறியாளர் கிருபாகரன், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் வெள்ளித்திருப்பூர் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கரமிப்பு செய்துள்ள நீர்நிலை புறம்போக்கினை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்டனர்.
அப்போது, ஆக்கிரமிப்பு செய்தவர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தபோதிலும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.