நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.75,000 மதிப்பு நாமகிரித்தாயார் உருவப்படம்
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.75,000 மதிப்பு நாமகிரித்தாயார் உருவப்படத்தை பக்தர்களின் தரிசனத்திற்காக பொருத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மேற்குப் பகுதியில் அருள்மிகு நரசிம்மர் சாமி மற்றும் நாமகிரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு 17ம் நூற்றாண்டில், நரசிம்மர் சன்னதி மலையைக்குடைந்து குடவறைக்கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. நரசிம்மர் சாமி கோயிலுக்கு எதிரே 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில்களுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கனித மேதை ராமானுஜர் மிகவும் சிரமமான கனித சூத்திரங்களுக்கு நாமகிரித்தாயார் தனது கனவில் வந்து விடை சொல்லிக் கொடுத்ததாக தனது சுய சரிதையில் எழுதியுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் இருந்து பல அறிஞர்கள் நாமக்கல் வந்து, நாமகிரித்தாயாரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
கொரோனா ஊரடங்கால் கடந்த 18 மாதங்களாக கோயில் நடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உட் பிரகாரத்தில், நாமக்கல்லில் நரசிம்மர் சுவாமி எழுந்தருளிய வரலாறு, நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் ஒரே கல்லினால் நாமக்கல் மலை உருவான வரலாறு போன்றவை ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது. இதில் நரசிம்மர், ஆஞ்சநேயர், மகாலட்சுமி ஓவியங்கள் இருந்தபோதும் நாமகிரி தாயார் அலங்காரத்துடன் உள்ள ஓவியமோ, புகைப்படமோ கோயிலுக்குள் இல்லை.
இந்த நிலையில் கோயிலுக்கு வந்த கரூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.75 ஆயிரம் செலவில் அழகிய போட்டோ வடிவில் நாமகிரி தாயார் படத்தை தயார் செய்து கோயில் நிர்வாகத்திடம் அன்பளிப்பதாக வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது, நாமகிரித்தாயார் உருவப்படம் கோயில் வளாகத்தில் பக்தர்களின் பார்வைக்காக பொருத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நாமகிரித்தாயார் படத்தையும் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து செல்கின்றனர்.