வரி பாக்கி செலுத்தாவிட்டால் ஜப்தி: எச்சரிக்குது நாமக்கல் நகராட்சி
நாமக்கல் நகராட்சிக்கு வரிபாக்கியை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.
HIGHLIGHTS
இதுகுறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சுதா கூறியுள்ளதாவது: நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. நகராட்சி மூலம் விதிக்கப்பட்ட 7,264 காலிமனை வரி விதிப்புகளில் மொத்தம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 96 ஆயிரம் இதுவரை நில உரிமையாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை நல்லிபாளையம், தும்மங்குறிச்சி, காவேட்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட நகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகள் ஆகும்.
அதேபோன்று நகராட்சி மூலம் விதிக்கப்பட்ட 3,690 தனிநபர் தொழில்வரி விதிப்புகளில் இதுவரை ரூ.1 கோடியே 61 லட்சத்து 26 ஆயிரம் நிலுவையாக உள்ளது. தனிநபர் தொழில்வரி விதிப்புகள் அனைத்தும் சேலம் ரோடு, திருச்சி ரோடு, கடைவீதி, மெயின் ரோடு, திருச்செங்கோடு ரோடு, மோகனூர் ரோடு மற்றும் பரமத்தி ரோடுகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணங்கள் மற்றும் பாதாள சாக்கடை கட்டணங்களும் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டி உள்ளது.
இந்த நிலுவை தொகையை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். செலுத்தாத நபர்களின் மீது நகராட்சி மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கை மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அனைவரும் வரி மற்றும் கட்டண நிலுவை தொகையை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.