மோகனூர் சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி துவங்க வேண்டும்: நாமக்கல் எம்எல்ஏ பேச்சு
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி துவக்க வேண்டும் என்று, சட்டசபையில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பேசினார்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பேசியதாவது: நாமக்கல் நகரில் உள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மக ளிர் கலைக்கல்லூரியில், 3,500 மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில், போதிய ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் இல்லை. எனவே காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
நாமக்கல்லில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் முடிவடைந்து, எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்த நிலையில் மருத்துவ கல்லூரிக்கு, தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. எனவே, கல்லூரிக்கான குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
நாமக்கல்லில், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தங்கிப் படிக்கும் வெளி மாவட்ட, மாணவிகளுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒரு மாணவியர் ஹாஸ்டலும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் ஒரு மாணவியர் ஹாஸ்டலும் இந்தாண்டு கட் டித்தர வேண்டும்.
மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 15 மெகா வாட் திறன் கொண்ட இணை மின் நிலையம் அமைக்க ரூ. 190 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திட்டம், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தி, விரைவில் மின் உற்பத்தியை துவக்க வேண்டும்.
நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். நாமக்கல் கலெக்டர் அலுவலத்தில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்த சரபங்கா வடிநிலக் கோட்ட, செயற்பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் நாமக்கல்லுக்கே மாற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏ ராமலிங்கம் பேசினார்.