சந்தா நிலுவை செலுத்தாத கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
அரசு கேபிள் டிவி சந்தா தொகை நிலுவை வைத்துள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் உடனடியாக அதை செலுத்தாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் பொதுமக்களுக்கு அரசு செட்டாப் பாக்ஸ்களை, மாத சந்தாத்தொகை ரூ 140 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி கட்டணத்தில் உள்ளுர் கேபிள் டி.வி ஆப்பரேட்டரர்கள் மூலம், ஒப்பந்த அடிப்படையில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த செட்டாப் பாக்ஸ்கள் பொதுமக்கள் அரசு கேபிள் ஒளிபரப்பினை மாத சந்தாக்கட்டணம் செலுத்தி பார்ப்பதற்கு மட்டுமே தவிர, செட்டாப் பாக்ஸ்களை உரிமை கோர இயலாது. ஒப்பந்தத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதால் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, சந்தாதாரர் குடிபெயர்ந்து சென்றாலோ, மாதாந்திரக் கட்டணம் செலுத்தாததால், அல்லது மற்ற காரணங்களால் இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ செட்டாப் பாக்ஸ், ரிமோட் கண்ட்ரோல், ஆடியோ வீடியோ கேபிள், பவர் அடாப்டர் ஆகியவற்றை உள்ளுர் கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
உள்ளுர் கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் அவற்றை அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயன் அடைந்து வரும் சந்தாதாரர்கள், தங்களின் விருப்பம் இல்லாமல், ஆப்ரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸை மாற்றினாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலைக் கூறி அரசு செட்டாப் பாக்ஸை நீக்கம் செய்து விட்டு தனியார் பாக்ஸை மாற்ற கட்டாயப் படுத்தினாலோ உடனடியாக 04286 232073 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் வேறு நிறுவனத்திற்கு செல்லும்போது அரசு செட்டாப் பாக்ஸ்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையினை முழுமையாக செலுத்த வேண்டும். இதற்கு மாறாக செயல்படும் ஆப்பரேட்டர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே சந்தா தொகை நிலுவை வைத்திருக்கும் உள்ளுர் கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் உடனடியாக அதை செலுத்த வேண்டும். தவறினால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.