நாமக்கல்லில் பெட்ரோல் விலை 'சதம்': அடங்காத எண்ணெய் நிறுவனங்களால் அல்லல்படும் மக்கள்
நாமக்கல் பகுதியில் பெட்ரோல் விலை இன்று செஞ்சுரி போட்டது. அடங்காத எண்ணெய் நிறுவனங்களால், ஒரே மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.4 வரை உயர்ந்துள்ளது.
HIGHLIGHTS
இந்தியாவில், அத்தியாவசியபொருளான பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை நிர்ணயம் பல ஆண்டுகளாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதனால் எண்ணெய் கம்பெனிகளுக்கு ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு மானியமாக வழங்கி வந்தது. தனியார் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த மானியம் கிடைக்காததால் பல எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனையை நிறுத்திவிட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து எண்ணெய்நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெறாமலே, தன்னிச்சையாக, பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த 2019ம் ஆண்டு மே 31ம் தேதி, ஒரு லிட்டர் டீசல் ரூ.70.88க்கும், பெட்ரோல் ரூ.75.04க்கும் விற்பனையானது. இன்று நாமக்கல் பகுதியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.17க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 15 மாதங்களாக கொரோனா தாக்கமும் அதை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளதால் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்கள், நாள்தோறும் விலை உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
பெரிய டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள், சொகுசு கார்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் தேவையானது அல்ல. ஆனால், சாதாரண விவசாயிகள் முதல் சிறு வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் டூ வீலர்கள், கார்கள், டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகளுக்கு பெட்ரோல், டீசல் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று, ஸ்டாலின் அறிவித்திருந்தார். பதவியேற்று 50 நாட்களுக்கு மேல் ஆகியும், இதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மத்திய அரசு அத்தியாவசியப் பொருளான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை, மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், மோட்டார் வாகன உரிமையாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.