/* */

பெண் கல்விக்கு முக்கியத்துவம்: கிராமசபை கூட்டத்தில் நாமக்கல் ஆட்சியர் பேச்சு

பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என, கிராமசபை கூட்டத்தில், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.

HIGHLIGHTS

பெண் கல்விக்கு முக்கியத்துவம்: கிராமசபை கூட்டத்தில் நாமக்கல் ஆட்சியர் பேச்சு
X

மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பேட்டப்பாளையம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு பேசினார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பேட்டபாளையம் பஞ்சாயத்து, மணியங்காளிப்பட்டியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில், பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம பஞ்சாயத்து தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் தேவைகளை அறிந்து, தங்கு தடை இன்றி விரைவாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். 18 வயது நிரம்பிய பிறகே பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதை அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

மேலும், இன்றைய தினம் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். தொடர்ந்து, கலெக்டர் தலைமையில், சுற்றுச்சூழல் பாதுகாப்போம் என்ற தலைப்பில், சுகாதார உறுதி மொழியை, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், நம்ம ஊரு சூப்பர் என்ற சுகாதார விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை, கலெக்டர் ஸ்ரேயா சிங் பெற்றுக் கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Updated On: 1 May 2023 10:15 AM GMT

Related News