நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
அகில இந்திய அளவில் தொழிற்சங்க பொது வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்கள் முழுமையாக ஓடவில்லை.
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசியை குறைக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்க கூட்டமைப்பு சார்பில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தத்ததால் பாதிப்பு ஏற்படாது, 28, 29 தேதிகளில் பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை செயலாளர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் ஒரு அரசு பஸ் கூட ஓடவில்லை. தொமுச, அண்ணா தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குரவத்து தொழிலாளர்களும் பணிக்கு வரவில்லை. மாவட்டத்தில் பல இடங்களில் தொழிற்சங்ங்களின் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன.
பஸ் நிலையத்திற்கு தனியார் பஸ்கள் மட்டுமே வந்தன. இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல கிராமங்களுக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வந்தன. அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பலரும் சிரமப்பட்டனர். பலர் டூவீலர்களில் சென்றனர்.
பெரும்பாலான அரசுத்துறை வங்கிகள் இயங்கவில்லை. ஒருசில வங்கிகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கின. தனியார்த்துறை மற்றும் கார்ப்பரேட் வங்கிகள் வழக்கம்போல் இயங்கியது.