நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான இடங்கள் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான இடங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவருக்கும்மிகப்பெரிய கடமை உள்ளது. கடல், ஆறு மற்றும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகைள கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்ட, ரசயான கலப்பில்லாத சிலைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்க்கண்ட இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
திருச்செங்கோடு தாலுகா- எஸ். இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் அருகில், குமாரபாளையம் தாலுகா- பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஓங்காளியம்மன் கோவில் படித்துறை, புதுப்பாளையம் அக்ரஹாரம் காவேரி ஆர். எஸ் (ரயில்வே பாலம்), பாப்பம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம், கொக்கராயன்பேட்டை பாலத்தின் கீழ் உள்ள விநாயகர் கோவில் அருகில், குமாரபாளையம் அக்ரஹாரம், பழையபாலம் அண்ணாநகர், குமாரபாளையம் அமானி கலைமகள் வீதி, பரமத்தி வேலுர் காசி விஸ்வநாதர் கோவில் அருகில், சோழசிராமணி பேரேஜ் கீழ் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் பின்புறம், மோகனுர் சிவன் கோவில் அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரை படித்துறை ஆகிய இடங்களில் முன் அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.