பிரதமரின் திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடன் உதவி
நாமக்கல் மாவட்டத்தில், பாரத பிரதமரின் திட்டத்தின்கீழ் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் கடன் உதவி பெறலாம்.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பாரத பிரதமரால் 2020-2021ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை, வலுப்படுத்தும் வகையில் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு கோழித்தீவனம் மற்றும் முட்டை சார்ந்த பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது தவிர ஏற்கனவே வேளாண் விளைபொருள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் செய்து வரும் சிறு நிறுவனங்களும் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை வணிகத்துணை இயக்குநரை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.