மஹாளய அமாவாசையையொட்டி மோகனூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மஹாளய அமாவாசையையொட்டி மோகனூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரிக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்காக, ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ய கால தர்ப்பணம், மஹாளய பட்சம் ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை நாளில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியை பெறலாம் என்பது ஐதீகம். இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மோகனூர், காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஈஸ்வரன் கோயில் படித்துறையில், அதிகாலை முதலே, ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் காவிரியில் புனித நீராடி, அசலதீபேஸ்வரரை வழிபட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக மோகனூரில் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவிரி ஆற்றுப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.