நாமக்கல் மாவட்டத்தில் 15 வயது நிரம்பிய 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
15 வயதுக்கும் மேல் 18 வயதிற்குள் உள்ள 80 ஆயிரம் பேருக்கு 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
தமிழக அரசின் அறிவிப்பின்படி 15வயதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம், நாமக்கல் அருகில் உள்ள எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
நாடு முழுவதும் ஒமிக்ரான் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் எளிதில் குணப்படுத்த முடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டால் குணப்படுத்துவது குடினம்.
தமிழக அரசின் உத்தரவின்பேரில் 15வயதுக்கும் மேற்பட்ட, 18 வயதிக்கும் உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கும், பள்ளி செல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக, அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 2007ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மாவட்டத்தில் 132 உயர்நிலைப்பள்ளிகள், 235 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு 10ம் வகுப்பு மற்றும் 11, 12ம் வகுப்புகளில் படிக்கும், மொத்தம் 65,856 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்படும். இவர்கள் தவிர பள்ளி செல்லாமல் உள்ள சுமார் 15 ஆயிரம் பேருக்கும் அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தடுப்பூசி போடப்படும். கொரோனா வைரஸ் முழுமையாக ஒழிந்துவிடவில்லை. எனவே அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
நாமக்கல் சப் கலெக்டர் மல்லிகா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.