இலவச வீட்டு மனை வழங்கக் கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இலவச வீட்டு மனை வழங்கக் கோரி கட்டுமான தொழிலாளர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
இலவச வீட்டுமனை வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில், இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் மாநில குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கட்டிட கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் மாதம் ரூ.3000 வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். தமிழக அரசு சட்டசபையில் அறிவித்த பண பயன்களை உடனடியாக வழங்க உத்தரவிடவேண்டும். தீபாவளி போனசாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சிஐடியு மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட செயலாளர் வேலுசாமி, உதவி செயலாளர் சுரேஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் தமிழ்மணி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவராஜ். பொருளாளர் கண்ணன். துணைத்தலைவர்கள் சரபோஜன் மாதேஸ்வரன், மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.