வீடியோ கான்பரன்சிங் மூலம் கலெக்டரின் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் 8 தாசில்தார் அலுவலகங்கள், 15 பிடிஓ அலுவலகங்கள், 5 நகராட்சி அலுவலகங்கள், 19 டவுன் பஞ்சாயத்து அலுவலகங்கள் என மொத்தம் 47 இடங்களில் இருந்து 26 மனுதாரர்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் வழங்கினார்கள்.
முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர். தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெற்றப்பட்ட மனுக்களின் அடிப்படையில், 4 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள், 2 பேருக்கு ஸ்மார்ட் ரேசன்கார்டுகள், ஒருவருக்கு வாரிசு உரிமை சான்றிதழ், 2 பேருக்கு போர்வெல்லை பதிவு செய்வதற்கான உத்தரவினையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ துர்கா மூர்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட சப்கலெக்டர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மோகனசுந்தரம், ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.