தமிழகத்திற்கான காவிரி நீர்: கார்நாடகாவிற்கு உத்தரவிட கோரிக்கை
தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு முறையாக திறந்து விட, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர், நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கர்நாடக அணைகளில் போதுமான அளவில் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு தினமும் 2,500 கன அடி வீதம் காவிரி நீரை திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தன. இந்த உத்தரவானது டிச.31 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் உரிய முறையில் தமிழகத்தில் வழங்க வேண்டிய காவிரி பங்கீட்டு நீர் வழங்கப்படவில்லை.
இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்து, அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வராததால் வழியோரங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் திட்டங்கள் செயல்பட முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், டெல்டா பாசனப் பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காகவும், விவசாயப் பணிகளுக்கான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு உண்டான நீரை உடனடியாக திறந்து விட வேண்டும். தினசரி நீர் வரத்தை கணக்கீடு செய்து, விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு நீரைத் திறந்துவிட, கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.