சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு
சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 56 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
HIGHLIGHTS
தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை தினமான ஆக. 15ம் தேதி, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அதற்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 தினங்களுக்குள் ஒரு மாற்று விடுப்பு அளிக்க வேண்டும் என்பது விதிமுறை. இவை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 83 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 56 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. அதேவேளையில் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி அதன் நகலை சம்மந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஒப்புதலும் பெறாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து சம்மந்தப்பட்ட 56 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறையினர் தெரிவித்தனர்.