ஆளில்லா விமானங்களை தயாரித்து கொங்குநாடு இன்ஜி., கல்லூரி மாணவர்கள் சாதனை
தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர்கள் ஆளில்லா விமானங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் - திருச்சி மாவட்டம், தோளூர்ப்பட்டியில் உள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர்கள் 100 பேர், 10 குழுவாக செயல்பட்டு, சென்னை ஸ்கைரைடர் ஏரோ சொல்யூசன் நிறுவனர் யுவராஜ் மற்றும் குழுவினர்களின் உதவியுடன், யுஏவி என்னும் ஆளில்லா விமானங்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.
கல்லூரி திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி கலந்துகொண்டு இந்த விமானவங்களின் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார். இவ்விமானங்களைக் கொண்டு கல்லூரியில் நடைபெற்ற மெகத்தான் போட்டியில் பங்குபெறச் செய்து வானில் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
இந்த ஆளில்லா விமானங்கள் விவசாயம், மருத்துவம், நில அளவீடு, வான்பாதுகாப்பு மற்றும் தீ போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அசோகன், டீன் அலுவலர் யோகப்பிரியா, மெக்கானிக்கல் துறை தலைவர் ஜெகதீஷ் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.