வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல்
கரூர் மாவட்டத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டு தனித்தனி அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.கரூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் உடனிருந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட அறையில், வைக்கப்பட்ட பிறகு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் பூட்டி சீல் வைத்தார்.
அதை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட அறை வாசல் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.அதுமட்டுமில்லாமல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.