தானுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருவிழா கொடியேற்றத்துடன் தாெடக்கம்
குமரி மாவட்டம் சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவில் திருவிழா தொடங்கிய நிலையில் பக்தர்களின் சரணகோஷங்களால் களைகட்டியது .
HIGHLIGHTS
இந்து தெய்வங்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒரே கோவிலில் ஒரே கருவறையில் ஒரே சிற்பத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் கோவிலாகவும் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் காணப்படுகின்றது சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழாவானது புகழ் பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது, அதன்படி இந்த வருடத்திற்கான மார்கழிப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பாரம்பரிய மரபுப்படி கோட்டார் பட்டாரியர் சமுதாய விநாயகர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொடிக்கும் கொடி மரத்திற்க்கும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரம், பஞ்சவாத்தியம் மேளதாளங்கள், பக்தர்களின் சரண கோஷம் முழங்க திருகொடியேற்றமானது நடைபெற்று மார்கழி பெருந்திருவிழா தொடங்கியது. மூன்றாம் திருவிழாவான வரும் 15ம் தேதி திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது, இதே போன்று திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் சுவாமி ரிஷப வாகனம் கருட வாகனம் பரங்கி நாற்காலி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்து வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற திரு கொடியேற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.