காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!

காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!

கோப்பு படம் 

கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரின் தவறான இயக்கத்தால் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாநகர பகுதிகளுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை காந்திபுரம் - காந்திபார்க் இடையே இயக்கப்படும் 7 என்ற எண்ணிட்ட ஒரு தனியார் பேருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது.

இந்த பேருந்தை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் திருநாவுக்கரசு என்பவர் இயக்கினார். அப்போது திடீரென திருநாவுக்கரசு கவனக் குறைவாக திடீரென பேருந்தை பின்னோக்கி நகரத்தியதாக கூறப்படுகிறது. இதில் பின்னால் இருந்த பேருந்தை தாண்டிச் செல்ல முயன்ற ஒருவர், இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் திருநாவுக்கரசை கீழே இறக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்ததால், அவர்கள் அவரை சராமரியாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது, உயிரிழந்தவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story