மழை நீருடன் கழிவு நீர் வருவதாக கூறி சாலை மறியல்
காஞ்சிபுரம் அருந்ததியர்பாளைய பகுதியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி மாமன்ற உறுப்பினர் மௌலி சசிகுமார் பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் பாளையம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக தெரிவித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் மாமன்ற உறுப்பினர்மௌலி, அப்பகுதி பொதுமக்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டு பகுதி அருந்ததி பாளையம் ஆகும். இது தாழ்வான பகுதி என்பதால் லேசான மழைக்கு அப்பகுதியில் இரண்டு அடி நீர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்திருக்கும்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அக் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்த நிலையில், தற்போது கழிவுநீரும் இதில் கலந்து வருவதால் துர்நாற்றம் மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்படும் என மாமன்ற உறுப்பினர் மௌலி சசிகுமார் புகார் தெரிவித்து இருந்தார்.
இதே போல் பொதுமக்களும் மாநகராட்சிக்கு புகார்கள் தெரிவித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறிந்த நிலையில் திடீரென மாமன்ற உறுப்பினருடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் வருவது வாடிக்கையாக இருந்தாலும் அதில் கழிவு நீர் கலப்பதால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுவதால் இந்நிலையை மேற்கொண்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
எப்பொழுது மழை வந்தாலும் இப்பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்தும் அவ்வப்போது அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ள நிலையில் இதற்கு நிரந்தர தீர்வாக அங்கு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு, அங்குள்ள நீரை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றவும் பைப்புகள் அமைக்கப்பட்ட நிலையிலும் இச்சம்பவம் தொடர்கதையாக உள்ளதாக தெரிய வருகிறது