ஜமாபந்தி நிகழ்வில் எம்எல்ஏ வருவாய் கோட்டாட்சியரிடம் மக்கள் மனு அளிப்பு
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் முகாமில் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட திருப்புக்குழி , சிறு காவேரிப்பாக்கம் , கோவிந்தவாடி அகரம், பரந்தூர், சிட்டியம் பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் உட்கோட்டம் ஆகிய 6 பிர்காவின் கீழ் உள்ள 114 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வருவாய்த் துறை சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
முந்திய காலங்களில் நமது முன்னோர்கள் மூன்று போகம் தீவிர விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தங்களது சொத்து மாற்றம் மற்றும் பிரித்தல் உள்ளிட்ட வருவாய் துறை கோரிக்கைகளை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஜமாபந்தி என அழைக்கப்படும் வருவாய் தீர்வாய முகாமில் மனு அளித்து தீர்வு காண்பது வழக்கம். இந்த நடைமுறை தொடர்ந்து தற்போதும் வருவாய்த்துறை மூலம் கடைபிடிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் இந்த வருவாய் தீர்வாயம் பிர்கா வாரியாக நடைபெறும்.
அவ்வகையில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பி. ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் துவங்கியது. திருப்புக்குழிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், சப் டிவிஷன், அனுபவ பாத்தியம் , முதியோர் ஓய்வு தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம். அளித்தனர்.
மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் மனுவிற்கான அத்தாட்சி கடிதமும் மனுதாரருக்கு வழங்கப்பட்டது.மனுக்கள் முழுவதும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு முறையான ஆய்விற்கு பின் தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் பிரகாஷ் தெரிவித்தார். இம்முகாமில் சிறப்பு சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சத்தியா, வட்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர் ஹரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.