அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் களம் காண்கிறாரா விஜய் ?
ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த தின விழாவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கவுள்ளனர்
HIGHLIGHTS
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இதற்கான முதல் கட்ட ஆயத்த பணிகளை துவக்கி உள்ளது. அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்க மாவட்டம் தோறும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதேபோல் அதிமுக கோடை காலத்தில் பொது மக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் குடிநீர் பந்தல் அமைத்து அந்தந்த பகுதி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் வழங்கி வருகின்றனர்.
இதுபோன்று கட்சிகள் தீவிர பணியில் இருக்கும் நிலையில் பிரபல திரைப்பட நடிகர் விஜய் சார்பில் விஜய் மக்கள் இயக்கம் அமைப்பினர் பல்வேறு மக்கள் பணிகளை அவ்வப்போது செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்று உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ளனர்.
இந்நிலையல் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் புதிய உறுப்பினர்களை ஆன்லைன் வாயிலாக சேர்க்கும் பணியை துவங்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமேதை என அழைக்கப்படும் அம்பேத்கர் 132 வது பிறந்த தினத்தில் அந்தந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் உறுப்பினர் சேர்க்கும் பணிக்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு துவக்கப்பட்டு 10 லட்சம் பேர் தற்போது பின் தொடர்ந்து செல்லும் நிலையில் அமைந்துள்ளது.
மாவட்டம் தோறும் நடக்கும் இந்த மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் காஞ்சி மாவட்டம் சார்பில் மாலை அணிவிக்க அனுமதி கோரி மாவட்ட தலைவர் தென்னரசு விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் அரசியல் கருத்துக்களை தனது படங்கள் மூலம் வெளிப்படுத்தி வரும் நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை அதிக அளவில் கொண்டாடும் தலித் மக்களின் ஆதரவை பெற முதல்முறையாக இந்த மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை முன்னெடுத்து உள்ளாரா என அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக உள்ளது.