தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வாயிலாக விழிப்புணர்வு திறன் வார வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் அனுசரித்தல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 11.07.2022 முதல் 15.07.2022 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பாக பல்வேறு சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
11.07.2022 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாலை 2.30 மணியளவில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும்; 12.07.2022 அன்று மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 11.00 மணியளவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறும்.
13.07.2022 அன்று மூன்றாம் பாலினத்தவருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும், 14.07.2022 அன்று அமைப்புசாரா உடலுழைப்புத் தொழிலாளர்களது முன்கற்றதிறனை அங்கீகரித்தல் மற்றும் பயிற்சியளித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும், 15.07.2022 அன்று அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 11.00 மணியளவில் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் நடைபெறவுள்ளது.
எனவே, மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.