நாத்திகரான கருணாநிதிக்கு கிரிவலப் பாதையில் சிலை எதற்கு?.எச்.ராஜா கேள்வி
திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை வைப்பதற்கு எதிராக அனைத்து ஆன்மிக சக்திகளையும் இணைத்து, போராட்டங்கள் நடத்தப்படும் என எச்.ராஜா கூறினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 9 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலையை வரும் 8ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் பாஜக மூத்த நிர்வாகி ஹெச். ராஜா இன்று அண்ணாமலையார் கோவில் அருகே உள்ள சிவான்ஜி குளத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலின் இடம் ஆக்கிரமிப்பு குறித்து கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா பேசுகையில்,
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை வைப்பது என்பது இந்துக்களை அவமதிக்கும் செயலாகும். சிலை அமைய பெற்றுள்ள இடத்துக்கு 92 சதுரடி மட்டுமே பட்டா உள்ளன. ஆனால், 250 சதுர அடிக்கு பட்டா உள்ளது என வருவாய் துறை அதிகாரிகள் சான்று கொடுத்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு, 92 சதுர அடி என மாற்றி உள்ளனர். 250 சதுரடி என மாற்றிய வருவாய் துறை அதிகாரியை ஏன் கைது செய்யவில்லை? 250 சதுர அடி பட்டா இடம் என மாற்றிய வருவாய் துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
அண்ணாமலையார் பூமியில் அண்ணாதுரை பெயரில் நுழைவு வாயில் அமைப்பது ஏன்? உடனடியாக, அண்ணாமலையார் நுழைவு வாயில் என மாற்ற வேண்டும். கிரிவல பாதையில், கோயில் இடங்களை ஆக்கிரமித்து கடைகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த பௌர்ணமிக்கு முன்பாக, கிரிவல பாதையில் கோயில் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கேட்டுக்கொள்கிறேன்.
இதனைத் தொடர்ந்து, திருவாரூரில் ஓடாத தேரை ஓட வைத்த போது ஏன் "நாத்திகர் கருணாநிதி" ஓட வைத்தார் என போராட்டம் செய்யவில்லை? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த ஹெச். ராஜா நீங்கள் என்ன கோபாலபுரத்து மீடியாவா? அறிவாலய அடிமைகளா? என கேள்வி எழுப்பினார்.
பாஜக சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், பாமக மற்றும் மாயாவதி, ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு கட்சிகளின் ஆதரவு உள்ளதால் கூட்டணி கட்சி வாக்கை விட ஒன்றரை மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.