அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்
புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை தினம் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
HIGHLIGHTS
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை தினம் காரணமாக பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
குறிப்பாக, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தா்கள் கோயிலில் குவிந்தனா். நம் மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் குறைந்த அளவே பார்க்க முடிந்தது.
பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசனம் வழியில் நீண்ட வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சென்ற தரிசன வழியானது கோவிலுக்குள் மட்டுமின்றி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தென்சன்னதி தெரு வரை நீண்டு காணப்பட்டது.
பொது தரிசனம் செய்வதற்காக கோயிலின் ராஜகோபுரம் வழியாக வந்த பக்தா்கள் மாட வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், பொது தரிசன வரிசையில் சுமாா் 4 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரையும் பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
மேலும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த பக்தர்கள் தங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் தவித்தனர்.
இதனால் கோவிலை சுற்றியுள்ள மாட வீதி, செங்கம் சாலை, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வபோது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் உடனுக்குடன் போக்குவரத்தை சீர் செய்தனர்.