இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: அதிமுக கவுன்சிலர் உயிரிழப்பு
சாத்தனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
சாத்தனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.முருகன் (வயது 45). இவர் அந்த பகுதி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். இந்த நிலையில் முருகன் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று தன்னுடைய நிலத்தில் வேலை செய்வதற்காக ஆட்களை தேர்வு செய்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது புளியந்தோப்பு என்ற இடத்தின் அருகே முருகன் வந்த போது தண்டராம்பட்டில் இருந்து செங்கம் நோக்கி எதிரே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று திடீரென முருகன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிபயங்கர சத்துடன் மோதியது. இதில் கீழே விழுந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து நடந்த உடன் கார் டிரைவர் மற்றும் உடன் வந்தவர்கள் காரை அங்கேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து சாத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக சாத்தனூர் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர். இறந்த அ.தி.மு.க. கவுன்சிலர் முருகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புளியந்தோப்பு சாலையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறுது. இதனால் அங்கு நெடுஞ்சாலை துறையின் வேகத்தடை அமைத்தால் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
இறந்த அ.தி.மு.க. கவுன்சிலர் முருகனுக்கு பிரபாவதி என்ற மனைவியும், 9-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்களும், 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.