அக்னி நட்சத்திரம் துவக்கம்: அண்ணாமலையார் கோவிலில் தாராபிஷேகம்
அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் நடைபெற்றது.
HIGHLIGHTS
சித்திரை மாதம் பின் பகுதியில், அக்னி நட்சத்திரம் துவங்கும். இக்காலத்தை, ஆகம நூல்களில், தோஷகாலம் என்பர். மேலும், நெருப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் வீட்டில், சூரியன் இருக்கும் காலம், அக்னி நட்சத்திர காலம். இக்காலத்தில் கோவில்களில் கர்ப்ப கிரகத்தில் உள்ள இறைவனை குளிர்விக்க, கர்ப்ப கிரகங்களில் தண்ணீர் கட்டுதல், தாராபிஷேகம் போன்றவை நடக்கும்.
அபிஷேகத்திற்கான பொருட்கள்:
இன்று அண்ணாமலையார் கோவிலில், அக்னி நட்சத்திரம் காலத்தில், சிறு துளையுள்ள வெள்ளி பாத்திரத்தில், பன்னீர் நிரப்பி, அதில் பச்சை கற்பூரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் மற்றும் வாசனை திரவியங்கள் இடப்பட்ட பாத்திரம் இறைவன் சிரசில் சொட்டு, சொட்டாக விழும்படி பொறுத்தப்பட்டது. உச்சிகால அபிஷேகம் காலை, 11.30 மணிக்கு முடிந்த பின், தாரா அபிஷேகம் துவங்கி, மாலை 6 மணி வரை நடக்கும். இக்காலத்தில் சிவபெருமான் சிரசில், நாக ஆபரணம் அணிவிக்கப்படாது. வரும் 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினசரி தாரா அபிஷேகம் நடைபெறும்.
ஆதி அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் அஷ்டலிங்க கோயில்கள், உட்பட மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் தாராபிஷேகம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது.