அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்டு ஊராட்சிக்கு ஒப்படைக்க கோரிக்கை
Request to reclaim Govt -owned outlying land and hand it over to the panchayat
HIGHLIGHTS
பெரியபாளையம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு நிலம் அளவீடு செய்து அடையாளம் காணப்பட்டது. விரைந்து ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த அக்கரபாக்கம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 27ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தனி நபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் ஊரில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. மேலும் கிராம மக்களின் பல்வேறு தேவைகளுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் இல்லாததால் அத்தியவசிய தேவைகள் தடைபட்டு வருகின்றன.
தனி நபரின் ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலத்தினை மீட்க வேண்டும் என வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அண்மையில் நடைபெற்ற ஜமாபந்தியில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள மெய்க்கால் புறம்போக்கு நிலத்தினை கண்டறியும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் இறங்கினர். ஊராட்சிமன்ற தலைவர் செந்தமிழன் அரசன் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் சேகர், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், நில அளவையர் கோபி ஆகியோர் அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலம் சுமார் 27ஏக்கர் அடையாளம் காணப்பட்டது. உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய முறையில் நோட்டிஸ் வழங்கி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அளவீடு பணிகளோடு விட்டுவிடாமல் அக்கிரமிப்பாளர்களிடம் இருந்து உரிய முறையில் அரசு புறம்போக்கு நிலத்தினை மீட்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கால்நடைகளின் மேய்ச்சல் பயன்பாட்டிற்கும், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் பயன்படும் வகையில் நிலத்தினை அக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மெட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கிட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.