நெல்லையில் பெட்ரோல், டீசல் டேங்கர் லாரி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம்
நெல்லை மாநகரில் பகல் 12 மணி முதல், 4 மணி வரை மட்டுமே டேங்கர் லாரிகள் அனுமதிக்கப்படும் என்பதை கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நெல்லை மாநகரப் பகுதிகளில், காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே டேங்கர் லாரிகள் அனுமதிக்கப்படும் என்றும் மீறினால் 600 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்தனர். இதை தொடர்ந்து, இம்முடிவை திரும்பப் பெறக்கோரி, டேங்கர் லாரி ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு, நெல்லையில் இருந்து இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலமும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலமும் இயக்கப்படும் 165 டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி அருகே தச்சநல்லூர் பகுதியில் பெட்ரோல். டீசல் விநியோகம் செய்யும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்குகள் உள்ளன. காலை 8 மணி முதல், 5 மணி வரை இந்த சேமிப்புக் கிடங்குகளில் இருந்து சுமார் 165 லாரிகளில் தென் மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கும், நியாயவிலை கடைகளுக்கும் விநியோகிக்கப்படுவது வழக்கம்.
காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று டேங்கர் லாரி ஓட்டும் ஓட்டுனர்கள், தச்சநல்லூரில் உள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளில் முன்பு லாரிகளை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று மாலைக்குள் முடிவு தெரியாவிட்டால், நாளை முதல் டேங்கர் லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.