சட்டப்பேரவையில் வ.உ.சி உருவப்படத்தை மாற்றக் கோரி உறவினர்கள் ஆட்சியரிடம் மனு
சட்டப்பேரவையில் உள்ள வ.உ.சியின் உருவப்படம் வடநாட்டவர்களை போன்று உள்ளதால் அவரது நினைவிடத்தில் உள்ளபடம் போன்று மாற்றி மாட்ட கோரிக்கை
HIGHLIGHTS
சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150வது பிறந்த நாள் தினம் வரும் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அவரது உருவப்படத்தை மாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட வ.உ.சியின் உருவப்படம் அவரது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வ.உ.சி கழுத்தில் இரண்டு புறமும் துண்டு அணிந்திருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் உள்ள படத்தில் ஒருபுறம் மட்டும் துண்டு அணிந்திருப்பது போன்று இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து மனு அளிப்பதற்காக வ.உ.சியின் மகன் வழி பேரன் வெள்ளைச்சாமி(மூத்த மகனின் மருமகன்) இன்று குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் தனது கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து மனு அளித்தார்.
இதுகுறித்து வெள்ளைச்சாமி கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள வ.உ.சியின் உருவப்படம் வடநாட்டவர்களை போன்று கையை கட்டி உள்ளது. எனவே அந்த படத்தை மாற்றி விட்டு ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ளது போன்ற படத்தை மாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.