உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு, தொகுதி பங்கீடு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியுடன் ஆலோசனை.
HIGHLIGHTS
திமுக ஆளும் கட்சி என்பதால் அதிகார பலத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்பதால் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிறது. இதனை எதிர்த்து அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக நெல்லையில் உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் பேட்டி.
தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் வெற்றி வியூகம், கூட்டணி கட்சி, இட ஒதுக்கீடு போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியுடன் ஆலோசனை நடைபெற்று கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், பெண்களுக்கான இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை ரத்து செய்து வருவதால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளதோடு அதிமுகவை ஆதரிக்கும் நிலைக்கு மக்கள் மாறிவிட்டதாகவும், இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவித்தார். குறுகிய காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இட ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படும் என்பதாலும் மட்டுமே பாமக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது என அவர் தெரிவித்தார். ஆளுங்கட்சியான திமுக அதிகார பலத்தை காண்பித்து அமைச்சர்களை களமிறக்கி தேர்தலில் பெற்றி பெற முயற்சிபதால் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
இதனை எதிர்த்து அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவது சந்தேகம். உள்ளாட்சித் தேர்தலின் போது வன்முறை அராஜகம் போன்றவைகளில் திமுகவினர் ஈடுபடுவது வழக்கம் என தெரிவித்தார். நீட் தேர்வில் அதிமுக கொண்டுவந்த சட்ட முடிவைத்தான் திமுகவும் கொண்டு வந்துள்ளது. கூடுதலாக அந்த முடிவில் ஏ கே ராஜன் கமிட்டி அளித்த முடிவை சேர்த்துள்ளனர். பாஜகவுடன் கூட்டணியில் நாங்கள் உள்ளதால் நீட்தேர்வு விளக்குக்கு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் எனவும் நீட் தேர்வு விளக்கு குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.