தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஆவினுக்கான பால் வரத்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து குறைந்து வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் ஆவின் பால் விநியோகம் செய்வதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு சுமார் 33ஆயிரம் லிட்டர் பால் விற்பனை ஆகும் சூழலில், 43 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது கொள்முதல் ஆவதோ வெறும் 20 ஆயிரம் லிட்டர் மட்டுமே. திண்டுக்கல் ஒன்றியத்தில் இருந்து சுமார் 9ஆயிரம் லிட்டர் பால் கொண்டு வரப்படுகிறது. ஆக மொத்தம் நாளொன்றுக்கு 29 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே தூத்துக்குடி ஒன்றியத்திற்கு வருவதால் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக பால் விநியோகம் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது.
மேலும் நிறைகொழுப்பு பால் உற்பத்திக்கான வெண்ணெய் மற்றும் SMP கையிருப்பு இல்லாத காரணத்தால் நிறைகொழுப்பு பாலான ஆரஞ்சு நிற பால் பாக்கெட் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு சொற்ப அளவிலேயே பால் பாக்கெட்டுகள் ஆவின் நிர்வாகத்தால் பால் முகவர்களுக்கு வழங்கப்பட்டுவதால் பொதுமக்களுக்கு நிறைகொழுப்பு பால் வழங்க முடியாமல் பால் முகவர்கள் கடும் அல்லல்பட்டு வருகின்றனர்.
இதனால் தூத்துக்குடி ஒன்றியத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தற்போது தான் ஆவின் நிர்வாகம் முகவர்களுக்கு பால் சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளது. இதே நிலை நீடித்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை பாதிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுவர்.
எனவே அரசு பால் கொள்முதலில் கூடுதல் கவனம் செலுத்தி அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது