கடன்சுமை ஏற்றியதே அதிமுக அரசின் சாதனை- கே.வி. தங்கபாலு
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சம் கடன் சுமை இருப்பது தான் அதிமுக அரசின் சாதனை என தூத்துக்குடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு பிரச்சாரத்தின் போது கூறினார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கீதா ஜீவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு இன்று தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதி மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் பொருளாதாரம் மற்றும் சமூக ,பொருளாதார, முன்னேற்றம் ஆகியவற்றில் இந்தியா 19-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதே சரித்திரம். மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதி இன்னும் கிடைக்கவில்லை. இங்குள்ள அதிமுக ஆட்சி மத்தியில் உள்ள பாஜகவிற்கு பயந்து நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு லட்சம் கடன் வைத்துள்ளதே இந்த அரசின் சாதனை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடன் மட்டும் 5 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலேயே நல்லாட்சி நடக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வந்தது. இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையினை திமுக-காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தமிழகம் எட்டியிருந்தது. எனவே மத்தியிலும் மாநிலத்திலும் மீண்டும் நல்லாட்சி தொடர்ந்திட வாக்காளர்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.