மீண்டும் சேதமடைந்த திருவாரூர் கமலாலய குளக்கரையை கலெக்டர் ஆய்வு
திருவாரூர் கமலாலய குளக்கரை தடுப்பு சுவர் உடைந்த இடத்தை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய தீர்த்தம் குளத்தின் கரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து அதை தற்காலிகமாக சரி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது. அதனையொட்டி நான்கு வீதிகளிலும் கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக கமலாலய கரையின் தடுப்புகள் மீண்டும் இடிந்து விழுந்துள்ளது .இதனை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனுடன் இனணந்து பார்வையிட்ட பின்பு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கமலாலய குளத்தை பொறுத்தவரை தற்போது தற்காலிக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பணியில் சிறிய தொய்வு ஏற்பட்டது. அது தற்போது மீண்டும் சரி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
குளத்தின் மற்றொரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு தண்ணீர் அழுத்தம் காரணமாகத் தான் இந்த மாதிரி நிலை ஏற்படுகிறது. குழாய்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மீண்டும் இது போல சம்பவங்கள் நடைபெறாமல் நிரந்தர தீர்வு எட்டப்படும் என கலெக்டர் கூறினார்.