அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
தஞ்சாவூரில் அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பாக அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் .தீபக் ஜேக்கப் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று (14.12.2023) நடைபெற்றது.
முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் கை.ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். ஆய்வு கூட்டத்தில் அம்மாபேட்டை மகிமாலை மையப் பணியாளர் எஸ்.கவிதா, ஒரத்தநாடு திரௌபதி அம்மன் கோவில் மையப் பணியாளர் நவநீதம், பூதலூர் ஆவாரம்பட்டி மையப் பணியாளர் ஷியாமளா, தமிழ்நாடு ஊரகம் விளார் மையப் பணியாளர் .எம்.மகாலெட்சுமி, தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்த பணியாளர் நிரோஜினி, திருவையாறு மாச்சனூர் மையத்தைச் சேர்ந்த ஜெயசீலி ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதற்கான பரிசுகளையும், கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் அரசின் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கும் அவர்களின் கல்விக்கும் உறுதுணையாக இருந்து நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு வருகின்ற குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. இதனை உணர்ந்து குழந்தைகளின் வருகைப் பதிவினை கண்காணித்து அவர்களின் கல்வியிலும், ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்க நீங்கள் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாதிரி அங்கன்வாடி மையமாக நீங்கள் பணியாற்றும் அங்கன்வாடி மையங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.