தென்காசியில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
தென்காசியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்லூரி மாணவிகள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30 ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 30 ம் தேதி முதல் பிப்ரவரி 13 ம் தேதி வரை தொழுநோயாளர்களுக்கான தடுப்பு முகாம், தோல்நோய் முகாம் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி மாணவிகள், மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்டஆட்சியர், நோயாளிகளுக்கு சிறப்பு காலணி, மருத்துவ உபகரணங்களை வழங்கினார். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 70 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது மாவட்டத்தில் 40 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு மூலம் மாத உதவித் தொகைகள் ரூ.1000 முதல் ரூ.1500 வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழுநோய் மருத்துவ பணி துணை இயக்குனர் மருத்துவர் ஆஷா, இணை இயக்குனர் நெடுமாறன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.