அரசு போக்குவரத்துக்கழக சிஐடியு தொழில்சங்கத்தினர் தர்ணா
அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழில் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
HIGHLIGHTS
அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழில் சங்கத்தினர் தர்ணா போராட்டம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வியாழக்கிழமையன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. .
ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். விருப்ப ஒய்வில் சென்றவர்கள் மற்றும் பணியில் இருக்கும் போது மரணமடைந்த தொழிலாளர்களுக்கு 2019-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
30 நாட்களுக்கு முன்பாக சட்டப்படி வழங்க வேண்டிய தீபாவளி முன்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களை அழைத்து போனஸ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உச்சவரம்பின்றி 20 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தர். பொதுச்செயலாளர் ஆர்.மணிமாறன், பொருளாளர் எம்.முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் எஸ்.சாமிஅய்யா, எஸ்.செந்தில்நாதன், கே.அண்ணாத்துரை உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஓய்பெற்ற நல அமைப்பு மாவட்டத் தலைவர் பி.லோகநாதன், பொதுச் செயலாளர் எஸ்.இளங்கோவன், ஜே.எஸ்.ஆர்.வின்செண்ட உள்ளிட்டோர் பேசினர்