விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெறலாம்
விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்ய இத்திட்டம் உதவும்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்.
விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், சிறு குறு விவசாயிகள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கென ஒரு பிரிவிலும், இதர விவசாயிகளுக்கு மற்றொரு பிரிவிலும் டிராக்டர், பவர் டில்லர், நாற்று நடும் இயந்திரம், சூழல் கலப்பை, விதை தெளிப்பான், தென்னை மரம் ஏறும் கருவி என விவசாயத்தை எளிமையாக்கும் மேலும் சில கருவிகள் வேளாண் பொறியியல் துறையின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்களில் மானிய விலையில் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 2022-23-ஆம் நடப்பு நிதியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-23ஆம் நிதி ஆண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தனிப்பட்ட விவசாயிகள் மானியத்தில் பெற்று பயன்பெறும் வகையில் முதல் ஒதுக்கீடாக 29 எண்களுக்கு ரூ.38.24 இலட்சம் மானியம் பொது பிரிவினருக்கும் மற்றும் 5 எண்களுக்கு ரூ.10.65 இலட்சம் மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் சிறு குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் அல்லது கருவிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற்றிட, புதுக்கோட்டை, திருவரங்குளம், விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகள் திருச்சி மெயின்ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, உதவி செயற்பொறியாளர் (வே.பொ), அலுவலகத்திலும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அரிமளம், திருமயம், பொன்னமராவதி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), ராஜேந்திரபுரம், நைனா முகமது கல்லூரி அருகில் அறந்தாங்கி அலுவலகத்திலும் தங்களது விண்ணப்பத்தினை நேரடியாக சமர்ப்பித்து மூதுரிமை அடிப்படையில் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார