இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி முகாமினை பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு
இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி முகாமினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4 ஒன்றியங்களில், ஒன்றியத்திற்கு தலா 4 மையங்கள் என 16 மையங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் வட்டார அளவில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் சங்குபேட்டை அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் வட்டார அளவில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி கையேட்டினை வழங்கினார்.
அப்போது கலெக்டர் பேசுகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பயனடையும் வகையிலும், மாணவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்துவதற்காகவும், தமிழக முதலமைச்சர் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நீங்கள் குழந்தைகளுடன் அதிகமாக பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு புதிய பல விஷயங்களை கற்றுத்தர வேண்டும். அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர்ந்து இடைநிற்றலின்றி கல்வி பயில வேண்டும் என்ற உணர்வை உண்டாக்க வேண்டும். அதற்கான பயிற்சிகள் உங்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி என்பது அறிவை மேம்படுத்தக்கூடிய செயலாகும். கற்றல் குறித்து உங்களுக்கு இப்பயிற்சியின் மூலம் ஒரு மேம்படுத்துதல் கிடைக்கும்.
மாணவர்களுக்கு வகுப்பறையில் கிடைக்கும் வாய்ப்புகளை விட இல்லம் தேடி கல்வியில் தனிப்பட்ட முறையில் நீங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையானவைகளை சொல்லித்தர வேண்டும். கதைகளை அதிகமாக சொல்வதன் மூலம் அவர்களின் கவனிக்கும் திறனை மேம்படுத்தலாம். நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்திட ஒத்துழைப்பாக இருக்கவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை) ஆர்.அறிவழகன், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.