எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆக.1 முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது.
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவு. இது குழந்தைகளின் பல நோய்களைத் தடுக்க உதவும் ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று தாய்ப்பால் ஆகும்.
நாமக்கல் அருகில் உள்ள எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. சங்க தலைவர் குமரன் தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் முத்துராஜா, சங்க இணை செயலாளர் சரவணன், முன்னாள் தலைவர்கள் துரைசாமி, பொன்னி, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் அனிதா சிவகுமார், ஜெயந்தி, புவனேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தாய்மார்களுக்கு, தாய்ப்பாலின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்கள். பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் பவுல்ட்ரி டவுன் இன்னர் வீல் சங்க தலைவர் கலாராணி, முன்னாள் தலைவர் தாட்சாயினி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.