ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக பெண்ணிடம் மோசடி
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை தருவதாக பெண்ணிடம் ரூ. 9.31 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தீபா (35). தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடி வந்தார்.
அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்து உள்ளது. அதில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை செய்து முடித்தால் சம்பளத்துடன் சேர்த்து கூடுதல் பணம் கிடைக்கும் எனவும், அதற்கு முன்பணமாக குறிப்பிட்ட தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதை உண்மை என நம்பி , தொடர்ந்து 9 முறை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு தீபா பணத்தை அனுப்பி உள்ளார். பின்னர், தனக்கு வர வேண்டிய பணத்தை கேட்டபோது, மேலும் டாஸ்க் செய்து பணம் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்ட தீபா, இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில், ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை தருவதாக ரூ.9 லட்சத்து 31 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். அதன் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.