நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 702 வாக்குச்சாவடி மையங்களிலும் நவ.1 முதல் 30ம் தேதி வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது, 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
முகாமில் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு மனுக்களை அளிக்கலாம். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் அளிக்கலாம். போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், உலகப்பம்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.