நாமக்கல்: இன்றுமுதல் வீடியோ கான்பரன்சிங் மூலம் குறைகேட்பு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல், வீடியோ கான்பரன்சிங் முறையில்,மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்தோறும் திங்கள்கிழமை, கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போழுது தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் வருகிற 26ம் தேதி திங்கள்கிழமை (இன்று) முதல் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ கான்பரன்ஸ் தாலுக்கா அளவிலான அலுவலகங்கள் மூலமாக செயல்படும்.
எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் தாசில்தார், பிடிஓ, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு சென்று, வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட கலெக்டரிடம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.