புதிய சமத்துவபுரம் அமைக்க வீட்டு வசதி சங்கம் மூலம் கடன் வழங்க கோரிக்கை
தமிழகத்தில் புதிய சமத்துவபுரம் அமைக்கும்போது பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் :
தமிழகத்தில் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கும்போது வீட்டு வசதி கடன் சங்கங்கள் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் என்று பணியாளர்கள் சங்க மாநிலக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத்தின் சேலம், நாமக்கல் மாவட்ட தலைவர் ஞானவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன்குமார் வரவேற்றார். மாநில பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். அசோசியேசன் மாநில செயலாளர் முருகேசன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சமத்துவபுரம் திட்ட பயனாளிகளுக்கு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும், சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி 1980ம் ஆண்டு முதல் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள சங்க பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கி வரும் வீட்டு வசதி சங்கங்கள் தொடர்ந்து கடன் வழங்க தமிழக அரசு மூலம் ரூ.500 கோடி அளவிற்கு பொறுப்புறுதி வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக சம்பளம் பெறாமல் பணியாற்றும் வீட்டுவசதி சங்க பணியாளர்களுக்க நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தள்ளுபடி திட்டங்களால் நலிவடைந்த சங்கங்களின் பணியாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மண்டல தலைவர்கள் முருகேசன், முத்தமிழ்செல்வன், குமரலிங்கம், மந்திரகணேசன் உள்ளிட்ட 85 மத்தியக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.