மோகனூர் காவிரி கரையோர வெள்ள பாதிப்பு பகுதிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மோகனூர் காவிரிக் கரையோரம் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன், மோகனூர் காவிரி கரையோரம் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, ஒருவந்தூர் பாவடி தெருவில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
மழை காரணமாக தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை, உயரமான பகுதிகளுக்கு செல்லும் படி அறிவுறுத்தினார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கெள்ளவும் அவர் வலியுறுத்தினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உரிய நிவாரணம், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைத்து கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நாமக்கல் சப் கலெக்டர் மஞ்சுளா, மோகனூர் தாசில்தார் சண்முகவேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.